Monday, 30 May 2011

உண(ர்)வு


ஒரு கவிஞனால்
மட்டும் எப்படி
அடுத்தவரின்
கருவைப்
பிரசவிக்க முடிகிறது?



Tuesday, 24 May 2011

திரையில் பார்த்ததில் அவ்வளவு நிறைவு இல்லை சகோ! நல்ல முயற்சி என்று சொல்லலாம். சுசீயின் 'வெண்ணிலா க.குழு வில் இருந்த எதார்த்தம் இதில் இல்லை. பா.சக்தியின் எழுத்தில் இருந்த இயல்பும் இதில் இல்லை.

 பெரிய வருத்தம் என்னவெனில் படத்திற்கு உழைத்தவர்கள் எல்லாம்  கதைக் களத்தின் மைந்தர்கள்.நிறைய சறுக்கல்கள். முதலில்  " அப்புக் குட்டி"யின் தேர்வே தவறு. தேனிக்காரரே! நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், அகமலையில் எந்த மனிதருக்காவது "தொப்பை" இருக்கா? இல்லை இருக்கத்தான் முடியுமா? அதுவும் குதிரையை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் ஒரு மனிதருக்கு..?
 சரி கதை 1982 ல் நடக்க வேண்டிய அவசியம் என்ன? 82 ல் அகமலை அப்படித்தான் இருந்ததா? ஊரே தூக்கி கொண்டாடும் குதிரைக்கு, கொல்லும் தண்ணியும் வைக்க ஆளில்லையா? அதற்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தான் கட்டிப் போடுவார்களா?

தாழ்த்தப் பட்டவர் பூசாரியா?  அப்படி இருந்தாலும் அப்படி இருக்கும் போது சாதிப் பிரச்சினை எப்படி வரும்?

எல்லாத்தையும் விட பெரிய கூத்து... குதிரை தானாகவே போயி சன்டை போடுவது...இது போன்ற இன்னும் சில குறைகளைத் தாண்டி எம் மண்ணின் வழக்கு நடையும் நையாண்டியும் அங்கங்கே கொஞ்சம் ஈரமும் மனதிற்கு இதமாகத் தான் இருந்தது. தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவு இல்லை சகோ! மண்ணிக்கவும்.

பின் குறிப்பு: தேனி ஈஸ்வர், பாஸ்கர் சக்தி இருவரும் எனக்கு நெருங்கிய நன்பர்கள். நன்பர்களின் படம் என்பதற்காக சூப்பர்,சூப்பர் என்று சொல்லுவதே திரைத் துறைக்கு ஒரு சாபமாக இருக்கிறது.

இப்படிக்கு " ஒரு சாமானிய ரசிகன்"




Friday, 20 May 2011

காக்க...காக்க…


ராமர் மசூதியோ,
பாபர் கோவிலோ,
இருந்துவிட்டு போகட்டும்...
முதலில்
சுத்தப்படுத்துங்கள்.
அந்த "புனிதத்தல"த்தையும்
தான்.

Wednesday, 18 May 2011

ஏக்கம்






தேயிலைத் தோட்டத்தின் மேல்
ஒரு தேனீர்க் கோப்பை
" காலியாகத் தான் உள்ளது"

Tuesday, 17 May 2011

ராஜபக்ஷே-வை குறை கூறாதீர்கள்


ஈழத் தமிழர்கள் அழிந்ததற்கும், ஆயுதம் ஏந்தியதற்கும் காரணம் இந்தியா தான். இதை மறுக்கவே கூடாது.
நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சத்தியமாகத் தமிழக அரசியல் தலைவர்கள் தான். ( எம்ஜிஆர் கூட போராட்டத்திற்கு தான் உதவி செய்தாரே ஒழிய, அரசியல் தீர்வு காண தீவிர முனைப்பு காட்டவில்லை) இந்திராகாந்தி(சார்க் மாநாட்டில் ஏற்பட்ட அடிக்கு பழி வாங்கவே வி.புலிகளை வளர்த்து விட்டார் என்பதாகக் கேள்வி), ராஜீவ் ( தாய் வழித் தனையன்), கருனாநிதி( நினைத்திருந்தால் நிச்சயம் அரசியல் தீர்வு ஏற்படுத்தி கொடுத்திருக்க முடியும்(தன் மற்றும் தன் குடும்ப வளர்ப்பிற்கே நேரம் போதவில்லை)) ஜெயலலிதா(எப்பொழுதும் அக்கரையே இல்லாதவர்), வைகோ(பிரபாகரனை விட அதிக ஆக்க சக்தி கொண்டவர். ஆனால் வெறும் கூச்சலுடனே நிறுத்திக் கொண்டார்), பழ.நெடுமாறன்( நிஜமாகவே பாடுபட்டவர். ஆனால் முழுவதும் புலிகளையே நம்பி இருந்து விட்டார்.அதற்கு மேல் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை). நீங்கள் எதிர்பார்க்கும் மற்ற பெயர்கள் எல்லாம் அரசியல்வியாதிகள் மட்டுமே. மேலே சொன்ன அத்துணை பேர்களும் செத்தொழிந்து கொண்டிருந்த தமிழர்களை வைத்து படம் காட்டி தன்னை அரசியலில் முன்னிலைப் படுத்திக் கொண்டார்கள்.

ராஜபக்ஷேவையோ அவருக்கு முன் இருந்தவர்களையோ யாரும் குற்றம் சொல்லாதீர்கள். அதற்கான தகுதி நம்மில் யாருக்கும் இல்லை. " ஏனெனில் குற்றம் செய்த்தவர்களும் அதை தூண்டியவர்களும் நாம் தான்"
சகோதரர்களே! இணையத்தில் நீங்கள் பொங்கி எழும்பொழுதுகளில் சில விசயங்களைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
எல்லா நாட்டுச் சுதந்திரப் போராட்டதிலும் வன்முறைகளும் தீவிரப் போராளிகளும் உண்டு அவர்களுக்குச் சமமாக பேச்சுவார்த்தையில் முடிக்கவல்ல அறிஞர்களும் இருப்பர். அதற்கான வாய்ப்பை புலிகள்(ஈழத்தில்) பெரிதாக வளரவிடவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நமக்கு முழுமையான வாய்ப்புகள் இருந்தும், அதை நம் ஆதாயத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டோம்.
ராஜீவைக் கொன்ற புலிகளுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்ற வரை கூட சரிதான்.புலிகளின் கொட்டம் அழிந்து ஏறக்குறைய 2 ஆண்டுகளாக நாம் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறோம்?

எனவே, சுய சிந்தனையை அழித்துக் கொண்டுவரும் தமிழர்களாகிய நாம், "ஈழத்தில் அழிந்த, அழிந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்காக" யாரையாவது வசை மொழிய ஆசைப் பட்டால், உடனே சென்று முகம் காட்டும் கண்ணாடியைப் பார்த்துச் சொல்லுங்கள்...
"த்த்தூ..."( பிரச்சினைத் தீரும் வரை எச்சிலைத் துடைக்காதீர்கள் தயவுசெய்து)
இப்படிக்கு,
ஈழ வரலாறு தெரியாத ஒரு அரைகுறைத் தமிழன்.

Monday, 16 May 2011

அன்புள்ள அம்மாவிற்கு,

முதல்வராக பதவி ஏற்றிருக்கும் தங்களுக்கு அறிவுரைக்கும் அளவு எனக்கு அறிவும் இல்லை, தைரியமும் இல்லை. அதனால் நம் முப்பாட்டன் ஒருவரின் வரிகளை, என்போன்றோரின் சார்பாக உங்கள் முன் வைக்கிறேன்.

புறநானூரு லிருந்து சில வரிகள்.

"...ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே!
மாரி பொய்ப்பினும்,வாரி குன்றினும்,
இயற்கை அல்ல செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்;
அது நற்கு அறிந்தனை யாயின், நீயும்

நொதும லாளர் பொது மொழி கொள்ளாது,
பகடு புறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தர்குவை யாயின், நின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே!
- புலவர் வெள்ளைக்குடி நாகனார்.

அதாவது,

மழை பெய்யாவிட்டாலும் விளைச்சல் குறைந்தாலும்
களவு முதலான செயற்கைக் காரணங்களால்
தீமைகள் விளைந்தாலும்
அரசர்களையே உலகம் பழித்து
காரணமாகச் சொல்லும்.

இதை அறிந்து கொண்டாய் எனில்,
யாரோ சொல்வதைப் பெரிதுபடுத்தாமல்
உழவர்களின் துன்பத்தைப் போக்கி
குடிமக்களைக் காப்பாய்.
அப்படிச் செய்தால் - உனக்கு
எல்லோரும் அடங்குவார்கள்.

 நான் சொல்ல வந்ததைச் சொல்லிட்டேன். அம்புட்டுத்தே(ன்).